திரை விமர்சனம்

Tuesday 20 January, 2009

Views

லேட்டஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட்டான கம்பவுண்டர் மன்னிக்கவும் டாக்டர். விஜய் அவர்களின் வில்லு, புரட்சி பூகம்பம் ஜே.கே.ரித்தீஷின் இன்னும் ரிலீஸ் ஆகாத வேட்டைப் புலி போன்ற திரை விமர்சனங்களை தலைவர் மீதுள்ள வெறியால் தேடி வந்த அன்பு நெஞ்சங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். எனக்கு அதெல்லாம் எழுதத் தெரியாது என்பதைத் தெரியப் படுத்தவே இந்த பதிவுக்கு இப்படி ஒரு தலைப்பு.

ஒரு பதிவராக பிரபலம் ஆவதற்கு குறைந்தபட்சம் சினிமா அறிவாவது வேண்டும். நானோ படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், காதல் காட்சிகளில் வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தும், செண்டிமெண்ட் காட்சிகளில் பக்கத்தில் இருப்பவர் மேல் கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டே பார்த்தும் பழகி விட்டேன்.

அல்லது அரசியல் அறிவாவது வேண்டும். அடுத்த முதல்வர் யார் என்று தீர்க்க தரிசனம் சொல்ல தெரியாவிட்டாலும் இப்போது யார் என்றாவது தெரிந்திருக்க வேண்டும். ஆற்காடு வீராசாமி என்ற பெயர் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் (அது கூட கைபேசி குறுஞ்செய்திகளின் மூலம்) எனக்குத் தெரிய வந்தது..

உகாண்டாவில் என்ன நடக்கிறது என்று தெரியா விட்டாலும், உள்ளூரில் குறைந்த பட்சம் நம் தெருவில் என்ன நடக்கிறது என்றாவது தெரிந்திருக்க வேண்டும். எனக்கு எங்கள் பின் வீட்டு பையன் பெயர் கூட தெரியாது.
எனது முழு நேர வேலை இணையத்தில் பாடல்களைத் தரவிரக்கம் செய்வது தான். அந்த நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று என் டைரி குறிப்பு போல இந்த ப்ளாகை எழுதத் துவங்கியிருக்கிறேன். குறிப்பேடு எழுதுவதிலும், படிப்பதிலும் உள்ள மஜாவான விஷயம் என்னவென்றால், கருத்துகளின் நிலையற்ற தன்மை தான். நான் இது வரையில் நான் மாற்றிக் கொள்ளாத ஒரே கருத்து 'கருத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்' என்பது மட்டும் தான்.

அடிக்கடி என்றால் வாரம் ஒரு முறை அல்ல. உதாரணமாக, சில வருடங்களுக்கு முன் என் அத்தை தேர்தல் பூத் அதிகாரியாக இருந்த பொழுது எனக்கு கள்ள ஓட்டு குத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதிமுகவினர் உலகை சுற்றி வந்து பழம் கேட்ட முருகர் போல், மை அடையாளத்தை பரிசோதித்து 50, 100 என்று பணம் கொடுத்துக் கொண்டிருந்த போது, திமுகவினர் விநாயகரைப் போல் நேரடியாக பூத் அதிகாரியை சரி செய்து மொத்தமாக அள்ளி விட்டனர். 10 ஓட்டுகள் திமுக வுக்கு குத்திய நான் மனம் மாறி அதிமுகவுக்கு குத்த ஆரம்பித்து விட்டேன். பின்பு மருபடியும் திமுக.

நானே கேள்வி நானே பதில் போல, நானே எழுதி நானே படித்துக் கொள்வதற்காக, என் ரசனையை மட்டுமே முன்னிருத்தி உருவாக்கப் பட்டது தான் இந்த வலைப் பூ. மற்றபடி உங்கள் ரசனை எனதை ஒத்திருந்தால் சந்தோஷமே!

எழுத வருதோ இல்லயோ Freeயா குடுத்தா தான் நம்ம பினாயிலையும் குடிப்போமே!!

1 மச்சீஸ் சொல்றாங்க:

http://urupudaathathu.blogspot.com/ said...

வாங்க வாங்க...

இப்பவே வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்..

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket